பத்ரா சாவல் நில மோசடி வழக்கில் சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத்துக்கு அக்டோபர் 3-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் குடியிருப்பு மறுசீரமைப்பு திட்டத்தில் நிதி முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் குறித்து அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இதில், சஞ்சய் ரெளத், அவரது குடும்பத்தினா் தொடா்புடைய பணப் பரிவா்த்தனைகள் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், மும்பையில் உள்ள சஞ்சய் ரெளத் வீட்டில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தியபோது கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில் அவரை கைது செய்து விசாரித்தனர்.
இதையும் படிக்க | ‘ராகுல் காந்தி தலைவராக வேண்டும்’: தமிழக காங்கிரஸ் தீர்மானம்
இதையடுத்து, மும்பையில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவருக்கு செப்டம்பர் 19 வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்றுடன் நீதிமன்றக் காவல் முடிவடையும் நிலையில், அக்டோபர் 3 வரை காவலை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், நீதிமன்ற உத்தரவின்படி குற்றப்பத்திரிகையின் நகல் சஞ்சய் ரெளத்திடம் வழங்கப்பட்ட நிலையில், ஜாமின் மனு மீதான விசாரணை செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது.