‘ராகுல் காந்தி தலைவராக வேண்டும்’: தமிழக காங்கிரஸ் தீர்மானம்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ராகுல் காந்தியை வரவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று, அப்பதவியிலிருந்து விலகிய ராகுல் காந்தி மீண்டும் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க மறுத்துவருகிறார்.
இதற்கிடையே, நாடு முழுவதும் 150 நாள்கள் 3,600 கி.மீ. இந்திய ஒற்றுமைக்கான நடைப்பயணத்தில் ராகுல் காந்தி ஈடுபட்டு வருகிறார். இந்த பயணத்தின் போது மக்களை நேரில் சந்தித்து குறைகளை ராகுல் கேட்டறிந்து வருகிறார்.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 11.30 மணிக்கு சென்னை ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது.
இதையும் படிக்க | பிழைப்பில் மண் அள்ளிப் போடுகிற விமர்சனமா இது?: கெளதம் மேனன்
இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தியை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக வரவேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, ராஜஸ்தான், சத்தீஸ்கர், புதுச்சேரி உள்ளிட்ட மாநில கமிட்டிகளின் பொதுக்குழுவில் ராகுல் காந்திக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.