ஹைதராபாத்: ஆசைக்கு இணங்க மறுத்த பெண் ஒருவரின் கழுத்தை ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினரின் தனி உதவியாளர் அறுத்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதி தெலங்கானா ராஷ்டிர சமிதி சட்டப்பேரவை உறுப்பினர் மாகண்டி கோபிநாத்தின் தனி உதவியாளர் (பொ) விஜயஷிம்ஹா, திங்கள்கிழமை காலை பிஎஸ் மக்தாவில் உள்ள பேகம்பேட்டில் திருமணமான பெண்ணான நிஷாவின் வீட்டுக்குச் சென்றுள்ளார், அங்கு தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு அவரை வற்புறுத்தியுள்ளார்.
அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்த விஜயஷிம்ஹா தன் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் தாக்கி கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டார்.
தகவல் அறிந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஜூப்ளி ஹில்ஸ் போலீசில் அந்த பெண்ணின் கணவர் சுராஜ் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையின் முதல்கட்ட தகவலின்படி, சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்ட நிகழ்ச்சியில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் நிஷா(35) பங்கேற்று நடனம் ஆடியுள்ளார். இதன்மூலம் நிஷா சட்டப்பேரவை உறுப்பினர் உதவியாளர் விஜயஷிம்ஹாவுக்கு அறிமுகமாகியுள்ளார்.
அப்போதிருந்து, விஜயஷிம்ஹா நிஷாவுக்கு நிர்வாண விடியோ அழைப்புகளை செய்து வற்புறுத்தி வந்துள்ளார், தனது அழைப்பை ஏற்க மறுத்தால், கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
விஜயஷிம்ஹா ஆளுங்கட்சி எம்எல்ஏவின் உதவியாளராக இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவதாக காவல்துறை மீது குற்றம்சாட்டியுள்ள கணவர் அவரது சுராஜ், எம்எல்ஏவின் உதவியாளர் மூலம் எங்கள் குடும்பத்தினருக்கு தொடர்ந்து கொலை மிரட்டு வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.