ஷஹரன்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் ஷஹரன்பூர் மாவட்டத்தில் கபடி விளையாட்டு வீரர்களுக்கு தயாரிக்கப்பட்ட உணவு கழிப்பறையில் வைக்கப்பட்டிருந்ததும், அங்கேயே அவர்களுக்கு பரிமாறப்பட்டதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கழிப்பறையில் உணவு வைக்கப்பட்டிருந்த விவகாரத்தில் மாவட்ட விளையாட்டுத் துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அனிமேஷ் சக்சேனா பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக விளையாட்டுத் துறை கூடுதல் முதன்மை செயலாளர் நவ்நீத் ஷேஹ்கல் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து விசாரணை நடத்த, மாநில அரசும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 16ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் ஷஹரன்பூர் மாவட்டத்தில் நடந்த கபடி விளையாட்டுப் போட்டியில் விளையாட்டு வீரர்களுக்கு பாதி வெந்த உணவு வழங்கப்பட்டதாகப் புகார் கூறப்பட்டது.
இதையும் படிக்க | என்ன நடக்கிறது உ.பி.யில்? மரத்தில் தூக்கில் சடலமாக மீட்கப்பட்ட இளம் காதல் தம்பதி
இந்த நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு, கழிப்பறையில் வைக்கப்பட்டிருந்த விடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கிருந்த கழிப்பறைக்கு மிக அருகே ஒரு பேப்பரில் பூரிகள் கிடந்ததும், கழிப்பறையிலேயே விளையாட்டு வீரர்களுக்கு உணவுகள் பரிமாறப்பட்டதும் அந்த விடியோவில் பதிவாகியுள்ளது.
இதற்கு மக்களும் விளையாட்டுத் துறையினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.