சந்த் கபீர் நகர்: உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் போன வாரம் சகோதரிகளின் சடலங்கள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நிலையில் இளம் காதல் தம்பதியின் சடலங்கள் மரத்தில் தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சந்த் கபீர் நகர் பகுதியில் ராம்பூர் கிராமத்தில் உள்ள மரத்தில், திங்கள்கிழமை மாலை, இளம் காதல் தம்பதியின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கபடி வீரர்களுக்கு கழிப்பறையில் பரிமாறப்பட்ட உணவு: விடியோ வைரல்
18 வயதான ஆண் மற்றும் 15 வயதே ஆன பெண் இருவரும் காதலித்து வந்ததாகவும், இவர்களது சாவில் மர்மம் இருப்பதாகவும், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று இருவரின் குடும்பத்தினரும் குற்றம்சாட்டியுள்ளனர்.
அவர்கள் பயன்படுத்திய செல்லிடப்பேசிகளும் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இருவரின் உடல்களும் உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் தெரிய வந்ததும் இது கொலையா தற்கொலையா என்பது உறுதி செய்யப்படும் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த வாரம் உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர கேரி மாவட்டத்தில், இரண்டு சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொன்று, மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை மாலை இளம் காதல் தம்பதி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.