மாணவிகள் மற்றும் சிறுமிகளின் ஆபாச விடியோக்கள் டிவிட்டரில் 20 - 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தில்லி மகளிர் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
மாணவிகளின் ஆட்சேபகரமான விடியோக்கள் விற்பனை செய்யும் தளமாக சுட்டுரை மாறி வருவதாகவும் தில்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் வேதனை தெரிவித்துள்ளார்.
சண்டீகர் பல்கலைக் கழகத்தில் கல்லூரி மாணவிகளின் குளியலறை விடியோக்கள் இணையத்தில் பரவிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், சுட்டுரையில் மாணவிகள் மற்றும் சிறுமிகளின் பாலியல் விடியோக்கள் பணத்திற்காக விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை விற்பனை செய்ய ஆபாச படத் தளங்கள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பொதுமக்கள் பலரும் பயன்படுத்தும் சமூக வலைதளமான சுட்டுரை தற்போது ஆபாச விடியோக்களை விற்பனை செய்யும் தளமாக மாறி வருவதாக மகளிர் அமைப்புகள் வேதனை தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள தில்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால், சுட்டுரையில் 20 - 30 ரூபாய்க்கு மாணவிகளின் ஆபாச விடியோக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. குழந்தைகளின் ஆபாச விடியோக்களை விற்பனை செய்யும் தளமாக சுட்டுரை மாறி வருகிறது. சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் விடியோக்கள் சுட்டுரையில் அதிகம் பகிரப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பல்வேறு மாநிலங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சமூக வலைதளங்களிலும் பெண்கள் குறித்த ஆபாச விடியோக்கள் அதிகம் பரப்பப்பட்டு வருவது வேதனை அளிப்பதாகவே உள்ளதாக மகளிர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.