புது தில்லி: நாடு முழுவதும் பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பு அலுவலகங்களில் நடைபெற்ற சோதனைகளுக்கு ‘ஆபரேஷன் ஆக்டோபஸ்’ என்று பெயரிடப்பட்ட விவரம் தற்போது தெரிய வந்துள்ளது.
இந்தத் தகவல்களைத் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஒட்டுமொத்த தொடர்புகளையும் கண்டறிய வேண்டும் என்பதற்காக, இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 300 அதிகாரிகளும் சோதனையின்போது அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் என்ஐஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த 'ஆபரேஷன் ஆக்டோபஸ்' நடவடிக்கைகளின் கீழ் 100-க்கும் மேற்பட்ட பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். சுமார் 200 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
பாப்புலா் ஃபிரண்ட் ஆப் இந்தியா உறுப்பினர்கள் தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை கண்டறிந்துள்ளது.
பிஎஃப்ஐ அமைப்பு பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி திரட்டுதல், நிதி உதவி அளித்தல், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுதல், ஆயுதப் பயிற்சி முகாம்களை நடத்துதல், தடை செய்யப்பட்ட இயக்கங்களில் மக்களைச் சோ்த்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவது குறித்து என்ஐஏ தடயங்களைச் சேகரித்து வந்தது.
இது தொடா்பாக அந்த இயக்கத்தினா் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பிஎஃப்ஐ உயர்நிலைத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மதத்தின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகையை வளர்க்கும் நோக்கத்துடன் வன்முறை மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட பயிற்சி அளிப்பதற்காக முகாம்களை ஏற்பாடு செய்ததாக என்ஐஏ கூறியுள்ளது.
கல்லூரி பேராசிரியரின் கையை வெட்டுதல், பிற மதங்களை ஆதரிக்கும் நபர்களை கொலை செய்தல், முக்கிய நபர்கள் மற்றும் இடங்களை குறிவைத்து வெடிபொருள்களை வைத்தல் போன்ற குற்றச் செயல்களை பிஎஃப்ஐ அமைப்பு நடத்திவருவதாக என்ஐஏ தெரிவித்துள்ளது