ஆந்திரப் பிரதேசத்தில் கடுமையான வெப்ப அலை நிலவி வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறுகையில்,
இன்று மாநிலத்தின் 12 மண்டலங்களில் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 115 இடங்களில் வெப்ப அலை இருக்கும் என்றும் கணித்துள்ளது.
ஆந்திரத்தில் 26 மாவட்டங்களின் கீழ் பல நூறு மண்டலங்கள் உள்ளடக்கியுள்ளது.
வெப்பநிலை அதிகரித்துள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடுமையான வெப்பச் சலனம் ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ள 12 மண்டலங்களில் 7 மண்டலங்கள் பார்வதிபுரம் மான்யம் மாவட்டத்திலும், 4 மண்டலங்கள் அனகாப்பள்ளியிலும், காக்கிநாடாவில் ஒன்றும் உள்ளன.
அதேபோல், அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் 7 மண்டலங்கள், அனகாபள்ளியில் 13, கிழக்கு கோதாவரியில் 10, ஏலூரில் ஒன்று, குண்டூரில் 6 மற்றும் காக்கிநாடாவில் 16 மண்டலங்களில் வெப்ப அலை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், கோனசீமா மாவட்டத்தில் உள்ள 6 மண்டலங்கள், கிருஷ்ணாவில் 2, என்டிஆர் பகுதியில் 4, பல்நாட்டில் 3, பார்வதிபுரத்தில் 7, ஸ்ரீகாகுளத்தில் 13, விசாகப்பட்டினத்தில் 3 மற்றும் விஜயநகரத்தில் 24 மண்டலங்களில் வெயில் சுட்டெரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.