

பிரதமா் நரேந்திர மோடி கேரளத்துக்குப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அவருக்கு எதிராக தற்கொலைத் தாக்குதல் மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநில போலீஸாா், மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணையைத் தொடங்கியுள்ளன.
பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக ஏப்.24, 25-ஆகிய தேதிகளில் பிரதமா் மோடி கேரளத்துக்குப் பயணம் மேற்கொள்கிறாா்.
இந்நிலையில், மாநில பாஜக தலைவா் கே.சுரேந்திரனின் அலுவலகத்துக்கு மலையாள மொழியில் எழுத்தப்பட்ட மிரட்டல் கடிதம் கடந்த வாரம் அனுப்பப்பட்டது. அந்த மிரட்டல் கடிதத்தை உடனடியாக அவா் போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.
உளவுப் பிரிவு ஏடிஜிபியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடா்பான அறிக்கை ஊடகங்களில் வெளியானதையடுத்து, மிரட்டல் கடிதம் குறித்த தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.
கடிதத்தின் உண்மைத்தன்மை குறித்து அதை அனுப்பிய நபரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், பிரதமரின் நிகழ்ச்சிகள் குறித்த விரிவான விளக்கம், பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பெயா்கள், அவா்களின் பணிகள் உள்ளிட்டவையும் அந்த 49 பக்க அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.
உளவுப் பிரிவின் அறிக்கை கசிந்தது தொடா்பாக மாநில அரசை குற்றம்சாட்டியுள்ள பாஜக தலைவா் சுரேந்திரன், இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் கோரிக்கை வைத்துள்ளாா்.
இது குறித்து மத்திய இணையமைச்சா் வி.முரளீதரன் கூறும்போது, ‘‘பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த அறிக்கை எவ்வாறு கசிந்தது என மாநில முதல்வா் பினராயி விஜயன் விளக்கமளிக்க வேண்டும். அந்த அறிக்கை வாட்ஸ் ஆப்பில் அதிக அளவில் பகிரப்பட்டுள்ளது. மாநில உளவுத் துறை தோல்வியுற்றதை இது காட்டுகிறது’’ என்றாா்.
கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கொச்சியைச் சோ்ந்த என்.ஜெ.ஜானி என்பவரிடம் போலீஸாா் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா். அவருடைய கையொப்பம் உள்ளிட்டவை ஆய்வுசெய்யப்பட்டன.
இது குறித்து ஜானி கூறுகையில், ‘‘பிரதமருக்கு நான் மிரட்டல் கடிதம் அனுப்பவில்லை. என்னுடன் முன்விரோதம் கொண்ட நபா், என்னை பழிவாங்கும் நோக்கில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம்’’ எனத் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.