நாட்டைப் பிரிக்க விடமாட்டேன், நாட்டின் ஒற்றுமைக்காக உயிரைக்கூட கொடுப்பேன் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ரமலான் நிகழ்ச்சி ஒன்றில் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
கொல்கத்தாவில் ரமலான் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, 'வங்காளத்தில் நாங்கள் அமைதியை விரும்புகிறோம். எங்களுக்கு கலவரம் வேண்டாம். நாட்டில் பிளவுகள் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. நாட்டில் பிளவுகளை உருவாக்க நினைப்பவர்களுக்கு இந்நாளில் ஒன்று சொல்கிறேன், நாட்டைப் பிரிக்க விடமாட்டேன். நாட்டின் ஒற்றுமைக்காக உயிரைக்கூட தரத் தயாராக இருக்கிறேன்.
யாரோ ஒருவர், பாஜகவிடம் பணம் வாங்கிக்கொண்டு இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பிரிப்பதாகச் சொல்கிறார்கள். முஸ்லீம் வாக்குகளை பாஜகவுக்கு பிரிக்க அவர்களுக்கு தைரியம் இல்லை என்பதை நான் அவர்களுக்குச் சொல்கிறேன். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், யார் தேர்ந்தெடுக்கப்படமாட்டார்கள் என்று பாருங்கள்.
ஜனநாயகம் ஒழிந்தால் எல்லாம் போய்விடும். இன்று அரசியல் சட்டம் மாற்றப்படுகிறது, வரலாறு மாற்றப்படுகிறது. தேசிய குடிமக்கள் பதிவேடு கொண்டு வந்தார்கள்; அதை செய்ய விடமாட்டேன் என்று அவர்களிடம் கூறினேன். அதுபோல இந்த நாட்டை பிரிக்கவும் அனுமதிக்க மாட்டேன் என்று பேசினார்.