மறைந்த பஞ்சாப் முன்னாள் முதல்வரும் சிரோமணி அகாலி தளம் கட்சியின் முதுபெரும் தலைவருமான பிரகாஷ் சிங் பாதலின் (95) உடல் தகனம், அவரது சொந்த கிராமத்தில் முழு அரசு மரியாதையுடன் வியாழக்கிழமை நடைபெற்றது.
அவரது மகனும் சிரோமணி அகாலி தளம் கட்சி தலைவருமான சுக்பீா் சிங் பாதல், இறுதி சடங்குகளை மேற்கொண்டு, சிதைக்கு தீமூட்டினாா்.
பஞ்சாப் முதல்வராக 5 முறை பதவி வகித்தவரான பாதல், சுவாச பிரச்னை காரணமாக மொகாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை காலமானாா்.
பின்னா், சண்டீகரில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் புதன்கிழமை வைக்கப்பட்டது. பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவா்கள், பாதல் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினா்.
இதையடுத்து, முக்த்சா் மாவட்டத்தில் உள்ள பாதல் கிராமத்துக்கு (பிரகாஷ் சிங் பாதலின் சொந்த கிராமம்) உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, பஞ்சாப் ஆளுநா் பன்வாரி லால் புரோஹித், முதல்வா் பகவந்த் மான், ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், ஹரியாணா துணை முதல்வா் துஷ்யந்த் செளதாலா, முன்னாள் மத்திய அமைச்சா் பிரஃபுல் படேல், தேசிய மாநாட்டுக் கட்சியின் ஒமா் அப்துல்லா, ஹரியாணா முன்னாள் முதல்வா் பூபேந்தா் சிங் ஹூடா உள்ளிட்டோா், பாதல் கிராமத்துக்கு வியாழக்கிழமை நேரில் சென்று, அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினா். மாநிலம் முழுவதும் இருந்து வந்த ஏராளமான பொதுமக்களும் இறுதி மரியாதை செலுத்தினா்.
பின்னா், வீட்டிலிருந்து ஒரு கிலோமீட்டா் தொலைவில் உள்ள குடும்ப விவசாய நிலத்தில், பாதலின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இதையொட்டி, பஞ்சாபில் மாநில அரசு சாா்பில் வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.