பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் அரசு வேலைகளுக்கு செல்வதற்கு தடை விதிக்க ராஜஸ்தான் மாநில அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் 14 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் அவர் பதிவிட்டிருப்பதாவது: பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் பதிவுகளை காவல் துறை வைத்திருக்க வேண்டும். அரசு வேலைகளில் சேர்வதற்கு முன்பாக குறிப்பிட்ட நபரின் நன்னடத்தைச் சான்று வழங்கப்பட்டு அதனை அரசு வேலைகளுக்கு செல்வதற்கு முன்பு அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். பாலியல் குற்றச்சாட்டில் கைதான குற்றவாளிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளில் ஈடுபடுபவர்கள் அரசு வேலைக்கு செல்ல தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனப் பதிவிட்டுள்ளார்.