மணிப்பூரில் வளர்ச்சியை ஏற்படுத்துவதே எங்களது தலையாய பணி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் மூன்றாவது நாளாக இன்று(வியாழக்கிழமை) விவாதம் நடைபெற்றது.
தொடர்ந்து இன்று மாலை 5 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பதிலுரை அளித்துப் பேசினார்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேசிய பிரதமர் மோடி, மணிப்பூர் குறித்து பேசாமல் பாஜக அரசின் சாதனைகள் குறித்தும், எதிர்க்கட்சிகளை குறிப்பாக காங்கிரஸை விமரிசித்தும் பேசி வந்த நிலையில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில், சுமார் ஒன்றரை மணி நேர உரைக்கு பின் பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரன் குறித்து பேசினார். அவர் பேசியதாவது:
மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உள்துறை அமைச்சர் மேற்கொண்டார். மணிப்பூர் வன்முறை தொடர்பாக அமைச்சர் அமித்ஷா நேற்று விரிவான விவரங்களை அளித்துள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பல்வேறு விஷயங்களை பேசிய எதிர்க்கட்சிகளுக்கு பதில் அளிப்பது எனது கடமை. மணிப்பூர் மாநிலத்தில் நிச்சயம் அமைதி திரும்பும் என நான் முழுமையாக நம்புகிறேன்.
மணிப்பூரில் அமைதியைக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் முழுமையாக முயற்சி செய்கின்றனர். மணிப்பூரில் வளர்ச்சியை ஏற்படுத்துவதே எங்களது தலையாய பணி. மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் அமைதியை நிலைநிறுத்த உழைத்து வருகிறார் என்று பேசினார்.
இதையும் படிக்க: மணிப்பூர் குறித்து பேசாத மோடி: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி 2 மணி நேரத்தைக் கடந்து உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.