பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவரது சொந்த கட்சியே இருப்பதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் அவரது சொந்த கட்சியிலேயே அவரது மதிப்பை இழந்து வருகிறார். காங்கிரஸ் அனைவரின் மனதிலும் உள்ளது. உங்களால் காங்கிரஸை நாட்டிலிருந்து நீக்கவே முடியாது. பிரதமருக்கு எதிராக அவரது கட்சியைச் சேர்ந்தவர்களே கலகத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது. பாஜக இஸ்லாமியர்கள் வாக்குகளைப் பெறுவதற்காக கூட்டங்கள் நடத்துவது நல்ல விஷயம். ஆனால், அவர்கள் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் தலித்துகள் என அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும். எனது அனுபவத்தில் நான் பார்த்தவரை மகாத்மா காந்தி மற்றும் அம்பேத்கர் போன்றோரின் பெயர்களை இவர்கள் எடுக்கவில்லை. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவர்கள் சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை அமைத்துள்ளனர் என்றார்.