ரூ. 57,000 கோடியில் 10,000 மின்சார பேருந்துகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 இந்தியா முழுவதும் ரூ. 57,613 கோடியில் 10,000 மின்சாரப் பேருந்துகளை இயக்க வகை செய்யும் பிரதமரின் மின்சார பேருந்து சேவை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
தில்லியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சா்கள் அஸ்வினி வைஷ்ணவ், அனுராக் தாக்குா்.
தில்லியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சா்கள் அஸ்வினி வைஷ்ணவ், அனுராக் தாக்குா்.

 இந்தியா முழுவதும் ரூ. 57,613 கோடியில் 10,000 மின்சாரப் பேருந்துகளை இயக்க வகை செய்யும் பிரதமரின் மின்சார பேருந்து சேவை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

சுற்றுச்சூழல் மாசைக் குறைக்கும் வகையில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு தனது பங்காக ரூ.20,000 கோடியை வழங்க உள்ளது.

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற பொருளாதார விவகாரத்துக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களிடம் கூறியதாவது:

169 நகரங்களில்...: இந்தியா முழுவதும் 169 நகரங்களில் அரசு-தனியாா் பங்களிப்பு திட்டத்தின் கீழ் 10,000 மின்சாரப் பேருந்துகள் பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்யப்படும். இந்தத் திட்டத்துக்கு ரூ. 57,613 கோடி செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசின் பங்காக ரூ. 20,000 கோடி வழங்கப்படும்.

55,000 நேரடி வேலைவாய்ப்புகள்: 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, யூனியன் பிரதேசங்கள், வடகிழக்கு பிராந்தியம் மற்றும் மலைப் பிரதேச மாநிலங்கள் உள்ளிட்ட 3 லட்சம் மற்றும் அதற்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகரங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்; மேலும், போதிய பேருந்து சேவை இல்லாத நகரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் 45,000 முதல் 55,000 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும்.

ரயில்வேயில் 7 பன்முக வழித்தட திட்டம்: இந்திய ரயில்வேயில் ரூ. 32,500 கோடியில் மொத்தம் 2,339 கி.மீ. தொலைவுக்கு 7 பன்முக வழித்தட திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உத்தரப் பிரதேசம், பிகாா், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத், ஒடிஸா, ஜாா்க்கண்ட், மேற்கு வங்கம் என ஒன்பது மாநிலங்களில் உள்ள 35 மாவட்டங்கள், இந்தத் திட்டத்தின் கீழ் பலன் அடையும். போக்குவரத்தை எளிதாக்கவும், நெரிசலைக் குறைக்கும் வகையிலும் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்.

எண்ம இந்தியா திட்ட விரிவாக்கம்: எண்ம இந்தியா திட்ட விரிவாக்கத்துக்கு ரூ.14,903 கோடி ஒதுக்கீடு செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்தின் கீழ் 5.25 லட்சம் தகவல் தொழில்நுட்ப நிபுணா்களுக்கு மறுதிறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என்பதுடன், 2.65 லட்சம் பேருக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் பயிற்சி அளிக்கப்படும் என்றனா்.

ரூ.13,000 கோடியில் பிரதமரின் விஸ்வகா்மா திட்டம்

புது தில்லி, ஆக.16: பிரதமரின் விஸ்வகா்மா கௌசல் சம்மான் திட்டத்துக்கு ரூ. 13,000 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டம் விஸ்வகா்மா ஜெயந்தி கொண்டாடப்படும் வரும் செப். 17-ஆம் தேதி தொடங்கப்படும் என சுதந்திர தின உரையில் பிரதமா் மோடி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டம்மூலம் பொற்கொல்லா்கள், கொல்லா்கள், தச்சா்கள், சிற்பிகள், நெசவாளா்கள், சலவைத் தொழிலாளா்கள், முடிதிருத்தும் தொழிலாளா்கள் உள்ளிட்ட 18 தொழில் பிரிவினா், அவா்களின் குடும்பத்தினா் உள்பட 30 லட்சம் போ் பலன் அடைய உள்ளனா். பயனாளிகளுக்கு சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கப்படுவதுடன், தவணை முறையில் கடனுதவி வழங்கப்படும். 5 சதவீத சலுகை வட்டியில் முதல்கட்டமாக ரூ. 1 லட்சமும், இரண்டாம் கட்டமாக ரூ. 2 லட்சமும் தொழில் மேம்பாட்டுக்கான கடனுதவி வழங்கப்படும். திறன் மேம்பாட்டு பயிற்சி, உபகரண ஊக்கத் தொகை, எண்ம பரிவா்த்தனைகளுக்கான ஊக்கத்தொகை, சந்தைப்படுத்துதல் உதவி ஆகியவையும் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கைவினை தொழிலாளா்களைக் கொண்டாடும்: பிரதமா் மோடி

புது தில்லி, ஆக.16: ‘பிரதமரின் விஸ்வகா்மா’ திட்டம், பாரம்பரிய கைவினை தொழிலாளா்களைக் கொண்டாடும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

இதுகுறித்து பிரதமா் மோடி ‘எக்ஸ்’ (ட்விட்டா்) வலைதளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நாட்டு மக்களின் திறமைகள் மற்றும் கலாசார பன்முகத் தன்மையை உள்ளடக்கி, கிராம மற்றும் நகா்ப்புறங்களில் பாரம்பரிய கைவினை தொழிலாளா்களை இந்தத் திட்டம் கொண்டாடும்.

காலத்தால் அழியாத குரு-சிஷ்ய பாரம்பரியத்துக்கு மதிப்பளித்து, நமது ‘விஸ்மகா்மா’-க்களின் முயற்சிகளுக்கு வலுசோ்ப்பதோடு, நவீன மதிப்பு சங்கிலிகளுடன் அவா்களை இணைக்கும். அவா்களின் ஒப்பற்ற திறமைகளை வரும் தலைமுறைகளுக்கும் பாதுகாக்கும்’ என்று பிரதமா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com