நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருக்கும் 225 பேரில் 27 பேர் கோடீஸ்வரர்கள். இவர்களில் 6 பேர் பாஜகவை சேர்ந்தவர்கள் என்பது வெள்ளிக்கிழமை வெளியான அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
மேலும், மாநிலங்களவை உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.80.93 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ஏடிஆர்) - தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு இணைந்து வெளியிட்ட அறிக்கையில், மொத்தமுள்ள 233 மாநிலங்களவை உறுப்பினர்களில் 225 எம்.பி.க்களின் குற்றப்பின்னணி உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது.
225 எம்.பி.க்களின் விவரங்களை அலசி ஆராய்ந்ததில் 27 (12 சதவீதம்) பேர் கோடீஸ்வரர்கள். இதில் அதிகபட்சமாக பாஜகதான் அதிக கோடீஸ்வர எம்.பி.க்களைக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கு தலா ரூ.100 கோடிக்கு மேல் சொத்துகள் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளது. மொத்தமுள்ள 85 பாஜக எம்.பி.க்களில் 6 பேர் கோடீஸ்வரர்கள். 30 காங்கிரஸ் எம்.பி.க்களில் 4 பேர் கோடீஸ்வரர்கள். 9 ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்.பி.க்களில் 4 பேர் கோடீஸ்வரர்கள்.
இது மட்டுமா, அடுத்ததாக, ஆந்திரம்தான், அதிகபட்சமாக ரூ.100 கோடிக்கு மேல் சொத்துகளை வைத்திருக்கும் அதிகமான எம்.பி.க்களை கொண்டிருக்கும் மாநிலமாக உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் தெலங்கானா, மகாராஷ்டிரம் உள்ளன.
ஆந்திரத்தின் 11 எம்.பி.க்களில் 5 பேர் (45 சதவீதம்), தெலங்கானாவின் 7 எம்.பி.க்களில் 3 பேர், மகாராஷ்ரத்தின் 19 எம்.பி.க்களில் 3 பேர், தங்களுக்கு ரூ.100 கோடிக்கு மேல் சொத்துகள் இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் அதே விஷயம்தான், மாநிலங்களவை உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.80.93 கோடி.