தேசிய ஜனநாயக கூட்டணி அமீபாவை போன்றது. அதற்கு உறுதியான வடிவம் மற்றும் அளவு கிடையாது என சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை தாக்கிப் பேசிய பிரதமர் நரேந்திர மோடிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரத்தின் ஹிங்கோலி பகுதியில் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: இந்தியா கூட்டணியில் தேசிய கட்சிகள் உள்ளன. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஒன்றிணைந்துள்ளது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள் பலவும் துரோகிகளாக உள்ளனர். அவர்கள் தங்களது கட்சியிலிருந்து பிரிந்து சென்று அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளனர். தற்போது இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி அமீபாவைப் போன்றது. அமீபாவுக்கு உறுதியான வடிவமும், அளவும் கிடையாது. அதுபோல இந்த கூட்டணிக்கும் உறுதியான வடிவமும், அளவும் கிடையாது. இந்தியா கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்தும் என்றார்.