சென்னை: மூன்று மாநில தேர்தல்களில் பாஜக வெற்றி இமாலய வெற்றி. இந்த வெற்றி வரும் மக்களவைத் தேர்தலுக்கு உற்சாகம் அளிக்கும் தேர்தல் முடிவுகள் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கா் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை (டிச. 3) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,சத்தீஸ்கா் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியை பின்னுக்குத் தள்ளி பாஜக முன்னிலையில் இருந்து வருகின்றன. மும்முனைப் போட்டி நிலவிய தென் மாநிலமான தெலங்கானாவில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்)கட்சியை அகற்றி தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி அரியணையில் ஏறுகிறது.
இந்த நிலையில்,மூன்று மாநில தேர்தல்களில் பாஜக வெற்றி இமாலய வெற்றி. இந்த வெற்றி வரும் மக்களவைத் தேர்தலுக்கு உற்சாகம் அளிக்கும் தேர்தல் முடிவுகள் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | 4 மாநிலத் தேர்தல் முடிவுகள்: 6 மணி நிலவரம்
இது குறித்து முருகன் தெரிவித்துள்ளதாவது:
நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், 3 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி இமாலய வெற்றி. மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து 5-ஆவது முறையாக ஆட்சியை பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் வரலாற்றுச் சாதனையை மக்கள் தீர்ப்பாக வழங்கியிருக்கிறார்கள். அங்கு இருக்கக்கூடிய பழங்குடியின மக்கள் பிரதமர் மோடி மீது வைத்துள்ள நம்பிக்கையே தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.
உழைப்பு ஒன்றை மூலதனமாகக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களுக்கு உறுதுணையாக இருக்கும் எங்கள் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, எங்களை பாதுகாக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் எங்களை வழிநடத்தும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு
இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த தேர்தல் முடிவுகள், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் பாஜக ஒவ்வொரு தொண்டனுக்கும் கொடுத்திருக்கிறது என்று முருகன் தெரிவித்துள்ளார்.