மிசோரம் சட்டப்பேரவைத் தேர்தலில் சோரம் மக்கள் இயக்கம் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த இயக்கத்தின் நிறுவனரான லால்துஹோமா முதல்வராக அறிக்கப்பட உள்ளார்.
யார் இவர்?
1949 ஆண்டு மிசோரத்தில் பிறந்த லால்துஹோமா, ஐபிஎஸ் அதிகாரியாக கோவாவில் பணியாற்றி வந்தார். அதன்பின், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டார். ஆனால், அப்பணியை ராஜிநாமா செய்த லால்துஹோமா, காங்கிரஸ் கட்சியில் இணைந்து 1984 ஆம் ஆண்டு மிசோரத்திலிருந்து நாடாமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின், கருத்து வேறுபாடுகளால் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய லால்துஹோமா சோரம் மக்கள் இயக்கத்தைத் துவங்குகிறார்.
இதையும் படிக்க: மிசோரம்: பெரும்பான்மை இடங்களை வென்றது சோரம் மக்கள் இயக்கம்
இந்தியாவில் கட்சித்தாவல் நடவடிக்கைக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட முதல் நாடாளுமன்ற உறுப்பினர் இவர்தான்.
மிசோரம் மக்களுக்கான அரசியலை முன் எடுத்துச் செல்லும் கொள்கைகளுடன் உருவான இந்த இயக்கம் பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியிருக்கிறது. குறிப்பாக, மதச்சார்பின்மை நிலைப்பாட்டில் இருக்கும் கட்சி என்பதால் சிறுபான்மை மதத்தவர்களைக் காக்கும் உறுதிப்பாட்டையும் வெளிப்படையாக அறித்தது.
2017 ஆம் ஆண்டு இந்த இயக்கத்தை உருவாக்கி தேர்தல்களில் போட்டியிட்ட லால்துஹோமா சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்.
இந்நிலையில், மிசோரமில் பலமாக இருந்த மிசோரம் தேசிய முன்னணி (எம்.என்.எஃப்.) கட்சியைத் தோற்கடித்து முதல்முறையாக ஆட்சியைப் பிடித்து முக்கியமான அரசியல் தலைவராகியிருக்கிறார் லால்துஹோமா!