பிகாரில் ஓடும் ரயிலில் இருந்து பயணி ஒருவரை டிக்கெட் பரிசோதகர் தள்ளி விட்டதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
பிகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள பத்தர் திகுலியா பஞ்சாயத்தைச் சேர்ந்தவர் நவல் பிரசாத். அவர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஹவுராவுக்கு சென்று கொண்டிருந்தார். அதில், பொது டிக்கெட் எடுத்து ஸ்லீப்பர் கோச்சில் பயணித்துள்ளார். டிக்கெட் சோதனையின் போது, பயணி பொது டிக்கெட்டைக் காண்பித்துள்ளார்.
எனவே, அவரை ஸ்லீப்பர்-கோச்சில் இருந்து இறங்க வலியுறுத்திய டிக்கெட் பரிசோதகர், இல்லையென்றால் அபராதம் செலுத்த நேரிடும் என எச்சரித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது டிக்கெட் பரிசோதகர், உஜியர்பூர் ரயில் நிலையத்தில் தன்னை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டதாக பயணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சக பயணிகள் மற்றும் அவரது நண்பர்கள் அவரை மீட்டு உஜியர்பூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். இதனிடையே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக உஜியர்பூர் ரயில்வே காவல் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.