அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி இன்று (டிசம்பர் 6) காலையில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
‘இந்திய அரசியலமைப்பின் தந்தை’ எனப் போற்றப்படும் பாபாசாகேப் அம்பேத்கர் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் ஆவார். பட்டியலின மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக போராடிய அண்ணல் அம்பேத்கர் 1956 டிசம்பர் 6-ஆம் தேதி தனது 65வது வயதில் காலமானார்.
இதையும் படிக்க | டாக்டர் அம்பேத்கர் மறைந்த அந்த நாளில்......
அவரது நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “பாபாசாகேப் அம்பேத்கர், இந்திய அரசியலமைப்பின் சிற்பியாக இருந்ததோடு, சமூக நல்லிணக்கத்தின் அழியாமல் இருக்கப் பாடுபட்டவர், அவர் பின்தங்கிய மக்களின் நலனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது மஹாபரிநிர்வாண நாளான இன்று அவருக்கு எனது பணிவான வணக்கங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
டாக்டர் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தி மத்திய அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பாரத ரத்னா பாபாசாகேப் அம்பேத்கர், நல்லிணக்கம் மற்றும் தேச ஒற்றுமை ஆகியவற்றை ஒன்றாக இணைத்து அரசியலமைப்பை உருவாக்கினார். அவர் நமது நாட்டிற்கு முற்போக்கான மற்றும் நீதியை மையமாகக் கொண்ட அரசியலமைப்பை வழங்கியுள்ளார். இது ஏழை எளிய மக்களுக்கு நீதி மற்றும் உரிமைகளை உறுதி செய்கிறது.
ஏழைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பாபாசாகேப் அம்பேத்கரின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஊக்கமளிக்கிறது. பாபாசாகேப் மஹாபரிநிர்வாண நாளில் அவருக்கு வணக்கம் செலுத்துகிறேன்.” என்று கூறியுள்ளார்.