குளிர்காலச் செயல் திட்டத்தின் பகுதியாக தில்லி நகர்ப்புற குடியிருப்பு மேம்பாட்டு வாரியம், தலைநகரில் வீடில்லாதவர்களுக்கான தற்காலிக முகாம்களை ஏற்படுத்தியுள்ளது.
வீடில்லாதவர்களை மீட்க அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் வீட்டுவசதி வாரியம் மட்டுமில்லாது குடிநீர் வாரியம், காவல் துறை உள்ளிட்ட அமைப்புகளின் அதிகாரிகள் அடங்கிய குழு இடம்பெற்றுள்ளது. நவம்பர் தொடக்கத்தில் இந்தக் குழு இதற்கான ஏற்பாடுகளைத் திட்டமிடத் தொடங்கியது.
வீடில்லாதவர்களை மீட்கப் பிரத்யேக மீட்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தில்லியின் பல்வேறு இடங்களில் 110 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 15 மீட்புக் குழுக்கள் இந்தப் பணியில் ஈடுபடவுள்ளனர். தேவை கருதி கூடுதலான முகாம்களையும் அமைக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இந்தக் குழுக்கள் தில்லியின் வீதிகளில், சாலைகளில் தங்கியிருப்போரை மீட்டு முகாம்களுக்குக் கொண்டு செல்லவுள்ளனர்.
வீடில்லாது தங்கியிருப்பவர்களைப் பற்றி பொதுமக்களும் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்கலாம் என்றும் வாட்ஸ் ஆப் எண் முதற்கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இந்த வாரியத்தின் 195 குடியிருப்புகளில் 7.092 பேர் தங்கியிருக்கும் நிலையில் புதிதாக உருவாக்கப்பட்ட 110 முகாம்களில் 2 ஆயிரம் பேர் வரை தங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.