சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட செல்போன் தயாரிப்பு நிறுவனமான விவோவின் இந்தியக் கிளையான விவோ - இந்தியாவின் (vivo - india) மீது பணமோசடி விவகாரத்தின் கீழ் அமலாக்கத்துறை முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஆண்டு அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், இந்தியாவில் வரிப்பணத்தைக் கட்டுவதைத் தவிர்க்க, விவோ நிறுவனம் சீனாவிற்கு ரூ. 62,476 கோடியை சட்டவிரோதமாக அனுப்பியிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. இதில் பல சீனர்களும், இந்திய நிறுவனங்களும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தது.
இதுதொடர்பாக, லாவா இன்டர்நேஷனல் மொபைல் நிறுவனத்தின் இயக்குநர் ஹரி ஓம் ராய், சீனாவைச் சேர்ந்த அலியாஸ் ஆன்ட்ரூ மற்றும் இரண்டு பட்டயக் கணக்காளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் இந்தியாவின் பொருளாதார இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக அமலாக்கத்துறை தனது விசாரணை ஆவணங்களில் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: டிபி புகைப்படங்களைப் பார்த்து ஏமாற வேண்டாம்: இது அடுத்த மோசடி
மேலும், லாவா நிறுவனம் விவோவுடன் இணையும் பேச்சு வார்த்தைகள் பத்து ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. எனினும் சீன நிறுவனத்தோடோ அல்லது, விவோ நிறுவனத்தோடோ எந்த பண பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளவில்லை என லாவா நிறுவனம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.