ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கின் ஜாமீன் மனு மீதான வழக்கில் வருகிற டிசம்பர் 21 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தில்லி நீதிமன்றம் கூறியுள்ளது.
தில்லி கலால் கொள்கை தொடர்பான பணமோசடி விவகாரத்தில் கடந்த அக்டோபா் 4-ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங்கை அமலாக்கத் துறை கைது செய்தது.
தற்போது நீதிமன்றக் காவலில் அவர் திஹார் சிறையில் இருக்கிறார். அவரது நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில், நேற்று(திங்கள்கிழமை) மீண்டும் தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சஞ்சய் சிங்கின் நீதிமன்றக் காவலை டிசம்பர் 21 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிலையில் இரு தரப்பிலும் வாதம் நடைபெற்றது. இதையடுத்து டிசம்பர் 21 ஆம் தேதி இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அன்றைய தினத்துக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளது தில்லி நீதிமன்றம்.