புதுதில்லி: தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 2 வெளிநாட்டினரிடமிருந்து ரூ.1.96 கோடி மதிப்புள்ள 3 கிலோ எடை கொண்ட 27 தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர்.
விவரக்குறிப்பின் அடிப்படையில், உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இருவர் தங்கம் கடத்தியதாக சுங்கத் தடுப்பு அதிகாரிகள் நேற்று வழக்குப் பதிவு செய்ததாக நிதி அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்தது.
இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரண்டு வெளிநாட்டினரிடமிருந்து ரூ.1.96 கோடி மதிப்புள்ள 3 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள 27 தங்கக் கட்டிகளை சுங்கத் துறை பறிமுதல் செய்தது. ஷார்ஜாவிலிருந்து லக்னோவில் தரையிறங்கிய பின்னர் லக்னோவிலிருந்து தில்லிக்கு இண்டிகோ விமானம் எண் 6 இ 6281 மூலம் பயணிகள் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். விமான நிலையத்தின் டெர்மினல்-1 நுழைவாயிலை நெருங்கியபோது சுங்க அதிகாரிகள் இரண்டு பயணிகளை வழிமறித்து அவர்களிடமிருந்து சுமார் ரூ.1.96 கோடி மதிப்புள்ள 3,150 கிராம் எடையுள்ள 27 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்தனர்.
சுங்கச் சட்டம், 1962 இன் பிரிவு 104 இன் படி இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.