பிரபல யூடியூபர் காமியா மற்றும் விகே பாண்டியன் ஆகியோர் ஸ்ரீ ஜகனாத் கோவிலுக்குள் நுழைந்தது பல கோடி இந்துக்களின் மத உணர்வுகளைக் காயப்படுத்தியதாக ஒடிசா பாஜகவின் பொதுச்செயலாளர் ஜட்டின் மோஹான்டி தெரிவித்துள்ளார்.
பிரபல யூடியூபர் காமியா ஜனி மற்றும் பிஜேடி கட்சித் தலைவர் விகே பாண்டியனைக் கைதுசெய்யுமாறு ஒடிசா பாஜகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்வேறு உணவு வகைகளை சாப்பிட்டு அது குறித்து விமர்சனங்களை யூடியூபில் பதிவிட்டு வருகிறார் காமியா ஜனி. தற்போது பிஜேடி தலைவர் விகே பாண்டியனுடன் ஸ்ரீ ஜகனாத் கோயிலில் வழங்கப்படும் சிறப்பு பிரசாதமான மஹாபிரசாத்-தை உண்ணும் காணொலி ஒன்றினை காமியா உருவாக்கியுள்ளதாக பாஜக-வினர் கூறுகின்றனர்.
இதையும் படிக்க: எம்.பிக்கள் இடைநீக்க விவகாரம்: பாதுகாப்பு தீவிரம்!
மேலும் 'ஏற்கனவே அவரது யூடியூப் பக்கத்தில் மாட்டிறைச்சி உண்ணும் காணொலியை அவர் பதிவிட்டுள்ளார். மாட்டிறைச்சி உண்ணும் ஒருவரை எப்படி கோயிலுக்குள் அனுமதிக்கலாம். இது பல கோடி இந்துக்களின் மத உணர்வுகளைக் காயப்படுத்தும் செயல். இருவரையும் காவல்துறையினர் கைது செய்ய வேண்டும்' என மோஹான்டி தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய பாஜக தலைவர் மோஹான்டி, அவர்கள் கைது செய்யப்படவில்லையெனில் நீதிமன்றத்தை அனுகவிருப்பதாக தெரிவித்துள்ளார். கேமராக்களின் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ள கோயிலுக்குள் கேமரா வைத்து காணொலி தயாரித்துள்ளனர் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், கேமராவுடன் யாரும் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லையென கோயில் நிர்வாகம் பதிலளித்துள்ளது. உரிய ஆதாரங்களைக் கட்சியினர் வழங்கினால் உரிய விசாரணையும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது