மறைந்த ஏழு வயது சிறுமி மாயா அப்பச்சு எழுதிய கதைகள் அவரது நினைவாக புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளன. தி கேர்ள் ஹூ அன்லீஷ்டு மேஜிக் (The Girl Who Unleashed Magic) என்ற பெயரில் அந்தப் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
குடகு பகுதியைச் சொந்த ஊராகக் கொண்ட அமெரிக்காவில் வசித்துவரும் சன்சிதா மற்றும் கார்த்திக் அப்பச்சு தம்பதியின் மகள் மாயா. அமெரிக்காவில் படித்து வந்த மாயா பல்முகத் திறமைகளைக் கொண்டிருந்திருந்ததாக அவரது சக மாணவர்களும் ஆசிரியர்களும் கூறுகின்றனர். பாரம்பரிய இசை, நடனம், இலக்கியம், கலை என அனைத்திலும் மாயா ஆர்வம் காட்டியுள்ளார். பூச்சியியல் நிபுனராக ஆகவேண்டும் எனப் புதுமையான கனவைக் கொண்டிருந்தார் என அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.
ஏவிஎம் (AVM) எனப்படும் தமனி செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த மாயா தனது ஏழு வயதில் உயிரிழந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முன்வந்தனர். அந்தக் குழந்தையின் நினைவாக அவரது பள்ளியில் செர்ரி மரம் ஒன்றை பள்ளி நிர்வாகம் நட்டு வளர்த்து வருகிறது.
இதையும் படிக்க: சத்தீஸ்கர் அமைச்சரவை விரிவாக்கம்: 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு
சிறுமி தனது நாள்குறிப்பில் கற்பனை கலந்து சின்னச் சின்னதாக எழுதி வைத்திருந்த தன் பயம் மற்றும் பள்ளி அனுபவங்கள் சார்ந்த கதைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளனர்.
குடகு பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு உத்வேகமளிக்க மாயாவின் இந்தக் கதைப் புத்தகம் வைக்கப்படும் என புத்தகத்தை வெளியிட்ட கொடவா மக்கடா கோட்டா அமைப்பின் தலைவர் பொல்லஜிரா ஐயப்பா தெரிவித்துள்ளார்.