வன உயிரின ஆர்வலரா நீங்கள்? எனில் உங்களுக்கு விருப்பமான வன உயிரிகளைத் தத்தெடுத்துக் கொள்ளலாம்.
பெங்களூரில் உள்ள பன்னர்கட்டா உயிரியல் பூங்காவின் விலங்குகள் தத்தெடுக்கும் திட்டத்தின் மூலம் ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரை ரூ.27 லட்சம் அளவுக்கு பணம் திரட்டப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்த கவன ஈர்ப்பை உருவாக்க சமூக வலைதளப் பிரபலங்களை அழைக்கவுள்ளது நிர்வாகம்.
பன்னர்கட்டா உயிரியல் பூங்கா வெளியிட்ட அறிக்கையில் இதுவரை 400 பேர் பல்வேறு வகையான உயிரிகளை, பறவைகளைத் தத்தெடுத்துள்ளதாகவும் இந்த ஆண்டு ரூ.27 லட்சம் பணம் அதன் மூலம் திரட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் உணவுக்கான கொடைத் திட்டத்தில் ரூ.1,56,128 பெறப்பட்டுள்ளது. விலங்குகளைத் தத்தெடுக்கும் திட்டத்தின் மூலம் திரட்டப்படும் பணம், விலங்குகள் பராமரிப்பு, அவற்றுக்கான உணவு, மருத்துவம் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
2022-2023 நிதியாண்டில் ரூ.75 லட்சம் அளவுக்கும் அதற்கு முந்தைய ஆண்டு 10 லட்சம் அளவுக்கும் நிதி இந்தத் திட்டத்தில் திரட்டப்பட்டது.
சிங்கம், ஆசிய யானை, புலி, ஒட்டகச்சிவிங்கி உள்ளிட்ட விலங்குகளைத் தத்தெடுக்க ஆண்டுக்கு ரூ.3 லட்சமும் நீர்யானையைத் தத்தெடுக்க ஆண்டுக்கு ரூ.2 லட்சமும், சிறுத்தை மற்றும் கரடிக்கு ரூ.50 ஆயிரமும் கழுதைப்புலிக்கு ரூ.30 ஆயிரமும் பறவைகள், எலிகள், பாம்புகளைத் தத்தெடுக்க் ரூபாய் ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: காஸா: ஒரே நாளில் இத்தனை பேர் பலியா?
தத்தெடுக்கிற விலங்குகளைப் பார்ப்பதற்கு மக்கள் அடிக்கடி வருவதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு இலவச அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது.