ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்): ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 11 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கரோனாவின் புதிய வகையான ‘ஜெஎன்.1’ தொற்று, பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் கேரளத்தைச் சோ்ந்த பெண்ணுக்கு இத்தொற்று அண்மையில் உறுதி செய்யப்பட்டது. நாடு முழுவதும் இதுவரை 23 பேருக்கு ‘ஜெஎன். 1’ வகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, கரோனா பரவல் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்துவதோடு, உரிய பொது சுகாதார நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியது.
இந்த நிலையில், ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 11 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 11 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதையடுத்து கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | பிகாரில் ஏஐஎம்ஐஎம் மாவட்ட தலைவர் சுட்டுக்கொலை
இதில், ஜெய்ப்பூரில் 7 பேரும், அல்வார், கோட்டா, தௌசா மற்றும் சவாய் மாதோபூர் மாவட்டங்களில் தலா ஒருவர் என 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மொத்தம் 656 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாட்டில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோா் எண்ணிக்கை 3,742 -ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக சனிக்கிழமை, நாட்டில் புதிய பாதிப்பு எண்ணிக்கை இருமடங்குக்கும் மேல் உயா்ந்துள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலானவை கேரளத்தை சேர்ந்தவை மற்றும் அண்டை மாநிலமான கர்நாடகாவைச் சேர்ந்தவை என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.