ராஜஸ்தான் மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் அரசு அறிமுகப்படுத்திய நலத்திட்டங்கள் எதுவும் நிறுத்தப்படாது என்று முதல்வர் பஜன்லால் சா்மா தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் 1924 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி பிறந்த வாஜ்பாய், மூன்று முறை நாட்டின் பிரதமராகப் பதவி வகித்தார். அவர் கடந்த 2018 ஆண்டு ஆகஸ்ட் மாதம் புது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். இந்த நிலையில் வாஜ்பாயின் 99வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவரது சிலைக்கும் உருவப் படத்திற்கு பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் வாஜ்பாயின் பிறந்த நாள் ராஜஸ்தானிலும் பாஜக சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய முதல்வர் பஜன்லால் சா்மா, ராஜஸ்தான் மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் அரசு அறிமுகப்படுத்திய எந்த திட்டத்தையும் நிறுத்த மாட்டோம் என்பதை நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். அரசு மருத்துவமனைகளில் இலவச மருந்துகள் தொடர்ந்து வழங்கப்படும். அத்தியாவசிய மருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.
வாஜ்பாய், ஏழைகளின் நலனுக்காக திட்டங்களை வகுத்தார். அதனை பிரதமர் மோடி முன்னெடுத்து செல்கிறார் என்றார். ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 25-ஆம் தேதி ஒரேகட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இதில் 115 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, காங்கிரஸிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸுக்கு 69 இடங்கள் கிடைத்தன.
இதையடுத்து, புதிய முதல்வராக பாஜகவின் முதல் முறை எம்எல்ஏ பஜன்லால் சா்மா தோ்வு செய்யப்பட்டு, அவரது தலைமையிலானஅரசு அண்மையில் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.