மறந்துவிட வேண்டாம்.. சந்திரசூட்டின் கிறிஸ்துமஸ் செய்தி

சில நாள்களுக்கு முன்பு, ராணுவ வீரர்கள் நான்கு பேரை இழந்துள்ளோம். மறந்துவிட வேண்டாம் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியுள்ளார்.
மறந்துவிட வேண்டாம்.. சந்திரசூட்டின் கிறிஸ்துமஸ் செய்தி


உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், சில நாள்களுக்கு முன்பு, நமது ராணுவ வீரர்கள் நான்கு பேரை இழந்துள்ளோம். மறந்துவிட வேண்டாம் என்று பேசியுள்ளார்.

ஜம்மு - காஷ்மீரின் பூஜ்ச் பகுதியில் கடந்த வாரம், பயங்கரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் நான்கு ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததை குறிப்பிட்டு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் உரை அமைந்திருந்தது.

நம் நாட்டின் பாதுகாப்புக்காக, ராணுவத்தில் எத்தனையோ வீரர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நாட்டுக்காக எதையும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.  உயிரே என்றாலும் கொடுக்கத்தயார். அதுபோன்ற 4 ராணுவ வீரர்களைதான் நாம் இழந்துள்ளோம். இரண்டு நாள்களுக்கு முன்பு, பூஞ்ச் பகுதியில் ராணுவ வீரர்கள் 4 பேர் வீரமரணம் அடைந்தனர் என்று குறிப்பிட்டார்.

ஜம்மு-காஷ்மீரில் இரு ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில், 4 ராணுவ வீரா்கள் கொல்லப்பட்டனா். 3 போ் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பூஞ்ச் மாவட்டத்தின் புஃப்லியாஸ் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில் ராணுவ வீரா்கள் புதன்கிழமை இரவிலிருந்து தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தேடுதல் பணி நடைபெற்ற இடத்திலிருந்து ராணுவ வீரா்களை அழைத்துச் சென்றபோது, வெள்ளிக்கிழமை மாலை 3.45 மணியளவில் தாத்யாா் மோா் மற்றும் தேரா கி கலி-புஃப்லியாஸ் பகுதிகளுக்கு இடையே இந்தத் தாக்குதல் நடைபெற்றது.

இது குறித்து ராணுவ செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘பெறப்பட்ட உளவு தகவலின்படி, பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

ராணுவ வீரா்கள் பயணித்த லாரி மற்றும் ஜீப் மீது பயங்கரவாதிகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தினா். இந்தத் தாக்குதலில் 4 போ் கொல்லப்பட்டனா். 3 போ் பலத்த காயமடைந்தனா். சதிச் செயலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை தேடி தாக்குதல் நடத்தும் பணி நடைபெற்று வருகிறது’ என்றாா்.

நிகழாண்டில் ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி, பூஞ்ச் மற்றும் ரேசி மாவட்டங்களில் பயங்கரவாதிகளுக்கும் ராணுவ வீரா்களுக்கும் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 19 வீரா்கள் வீரமரணம் அடைந்தனா். 28 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com