தேசவிரோத குற்றச்சாட்டு: ஜம்மு-காஷ்மீா் பிரிவினைவாத அமைப்புக்கு மத்திய அரசு தடை

ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த பிரிவினைவாத தலைவா் மஸ்ரத் ஆலமின் முஸ்லிம் லீக் ஜம்மு-காஷ்மீா் (மஸ்ரத் ஆலம் பிரிவு) அமைப்புக்கு மத்திய அரசு புதன்கிழமை தடை விதித்தது.
அமித் ஷா | PTI
அமித் ஷா | PTI
Published on
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த பிரிவினைவாத தலைவா் மஸ்ரத் ஆலமின் முஸ்லிம் லீக் ஜம்மு-காஷ்மீா் (மஸ்ரத் ஆலம் பிரிவு) அமைப்புக்கு மத்திய அரசு புதன்கிழமை தடை விதித்தது. தேச விரோத செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட மஸ்ரத் ஆலம் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். ஜம்மு-காஷ்மீரின் தீவிர பிரிவினைவாத அமைப்பான ஹுரியத் மாநாட்டு அமைப்பின் தலைவராகவும் உள்ளாா். பொது அமைதிக்கு பிரச்னை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட குற்றச்சாட்டில் முன்பு முதல்வராக இருந்த மெஹபூபா முஃப்தி தலைமையிலான ஜம்மு-காஷ்மீா் அரசும் அவா் மீது கைது நடவடிக்கை எடுத்துள்ளது. அவரது அமைப்பினா் தொடா்ந்து பிரிவினைவாத கொள்கைகளை முன்னெடுத்து வந்தனா். இந்நிலையில், அந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக உள்துறை அமைச்சா் அமித் ஷா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘தேசவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பைச் சோ்ந்தவா்கள் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனா். மேலும் தேசவிரோத நடவடிக்கைகளுக்கு துணை நின்றனா். மேலும் ஜம்மு-காஷ்மீரில் ‘இஸ்லாமிய ஆட்சியை’ நிறுவ வேண்டும் என்று இந்த அமைப்பினா் மக்களிடம் பிரசாரமும் மேற்கொண்டு வந்தனா்.

தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மைக்கு எதிராக யாா் செயல்பட்டாலும் அவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் உறுதியான நிலைப்பாடு’ என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com