நடப்பு நிதியாண்டுக்கான மத்திய அரசின் பங்கு விலக்கல் இலக்கு, ரூ.65,000 கோடியில் இருந்து ரூ.50,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
2023-24ஆம் நிதியாண்டில் பங்கு விலக்கல் மூலம் ரூ.51,000 கோடி வருவாய் ஈட்ட பட்ஜெட்டில் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் பங்கு விலக்கல் மற்றும் சொத்துகளை பணமாக்குதல் மூலம் ரூ.65,000 கோடி வருவாய் ஈட்ட 2022-23 பட்ஜெட்டில் இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த மதிப்பீடு ரூ.50,000 கோடியாக தற்போது திருத்தப்பட்டுள்ளது. இதுதவிர, சொத்துகளை பணமாக்கும் நடவடிக்கை மூலம் நடப்பு ஆண்டு மற்றும் அடுத்த நிதியாண்டில் ரூ.10,000 கோடி கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை வலைத்தளத்தில் இடம்பெற்றுள்ள தகவலின்படி, பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் இதுவரை ரூ.31,100 கோடிக்கு மேல் ஈட்டப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 1 முதல் தொடங்கும் நிதியாண்டில் இந்திய கப்பல் போக்குவரத்து கழகம், என்எம்டிசி உருக்கு நிறுவனம், இந்திய சரக்கு பெட்டக கழகம், விசாகப்பட்டினம் உருக்கு ஆலை உள்ளிட்டவை தனியாா்மயமாக்கலுக்கான அரசின் பட்டியலில் உள்ளன. பங்கு விலக்கலுக்கான பட்ஜெட் இலக்கை அரசு தவறவிடுவது, இது தொடா்ந்து 4-ஆவது ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.