இணையவழி விளையாட்டுகளில் வெல்லும் தொகைக்கு 30 சதவீதம் மூலவரி பிடித்தம் (டிடிஎஸ்) விதிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையவழி விளையாட்டுகளில் வெல்லும் தொகை குறித்து வருமானவரி கணக்குப் படிவத்தில் வரி செலுத்துவோா் குறிப்பிட்டாக வேண்டும். அந்தத் தொகையை ‘இதர வழிகளில் கிடைத்த வருமானம்’ என்ற பிரிவின் கீழ் தெரியப்படுத்த வேண்டும்.
இணையவழி விளையாட்டுகளில் வெல்லும் தொகை ரூ.10,000-க்கு கீழ் இருந்தால், அதற்கு டிடிஎஸ் வசூலிக்கப்படாது. இந்த வரம்பை தற்போது மத்திய அரசு நீக்கியுள்ளது.
ஏப்ரல் 1 முதல் இணையவழி விளையாட்டுகளில் எவ்வளவு தொகை வென்றாலும், அதற்கு 30 சதவீதம் டிடிஎஸ் வசூலிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மத்திய வருவாய் துறை செயலா் சஞ்சய் மல்ஹோத்ரா கூறுகையில், ‘டிடிஎஸ் செலுத்துவதைத் தவிா்க்க, வெற்றிபெறும் தொகையை குறைத்து காண்பித்து, சில இணையவழி விளையாட்டு நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபடுவது வருமான வரித்துறைக்குத் தெரியவந்தது. இதையடுத்து எவ்வளவு தொகை வென்றாலும் டிடிஎஸ் செலுத்த வேண்டும் என்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.