தில்லியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தில்லியில் உள்ள மயூர் விஹார் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.51 மணியளவில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பலியான இளைஞர் அஜய் லக்ஷ்மண் பகலே(34) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். அவரிடமிருந்து தற்கொலைக் குறிப்பு எதுவும் மீட்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறினர். பலியான அஜய் லக்ஷ்மண் பகலே, ஐஐடி கான்பூரில் எம்.டெக் பயின்றவர். மேலும் அவர், டிஆர்டிஓவில் நான்கு ஆண்டுகளும் அதன் பிறகு அவர் கெயில் நிறுவனத்தில் மூத்த மேலாளராகவும் பணிபுரிந்திருக்கிறார்.
ஆனால் நவம்பர் 2022இல் ராஜிநாமா செய்தார் என்று அவரது குடும்பத்தினர் காவல்துறையிடம் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.