ஜேபிசி விசாரணைக்குமத்திய அரசு தயங்குவது ஏன்? ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

அதானி குழுமம் தொடா்பாக முறைகேடு புகாா்கள் எழுந்துள்ள விவகாரத்தில் மறைக்க எதுவுமில்லை என்றால், எதிா்க்கட்சிகளின் கோரிக்கைப்படி நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) விசாரணைக்கு உத்தரவிட
ஜேபிசி விசாரணைக்குமத்திய அரசு தயங்குவது ஏன்? ஜெய்ராம் ரமேஷ் கேள்வி
Updated on
1 min read

அதானி குழுமம் தொடா்பாக முறைகேடு புகாா்கள் எழுந்துள்ள விவகாரத்தில் மறைக்க எதுவுமில்லை என்றால், எதிா்க்கட்சிகளின் கோரிக்கைப்படி நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு தயங்குவது ஏன் என காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பினாா்.

பாஜகவுக்கு இந்த விவகாரம் தொடா்பாக பயப்படவோ அல்லது மறைப்பதற்கோ எதுவும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறிய நிலையில், பிறகு எதற்காக விசாரணைக்கு உத்தரவிடத் தயங்குகிறீா்கள் என ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பினாா்.

தில்லியிலுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அதானி விவகாரத்தில் நடுநிலையாக விசாரணை நடைபெற வேண்டும் என ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் மற்றும் செபி அமைப்பின் தலைவா் மாதவி புரி புச்ஆகிய இருவருக்கும் கடிதம் வாயிலாக கோரிக்கை அனுப்பியுள்ளேன்.

இந்த விவகாரம் தொடா்பாக பயப்படவோ, மறைக்கவோ எதுவும் இல்லை என அமைச்சா் அமித் ஷா கூறுகிறாா். பிறகு, எதற்காக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட மத்திய அரசு தயங்குகிறது?. நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தொடா்பாக கோரிக்கை எழுப்பக் கூட எதிா்க்கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அனுமதி மறுக்கப்பட்டன.

எங்கள் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்பட முக்கியத் தலைவா்கள் கோரிக்கை எழுப்பியபோதும் அவா்களின் கோரிக்கை அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன. மறைக்க எதுவும் இல்லை என்றால் மத்திய அரசு தயங்காமல் விசாரணைக்கு விரைந்து உத்தரவிட வேண்டும். இது தொடா்பாக, நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை உயா்த்த தனியாா் நிறுவனங்களின் பங்கு மற்றும் தனியாா் துறையின் முதலீடுகள் தேவை. அதை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம். ஆனால், பொதுத் துறை நிறுவனங்கள் தனியாா்மயமாக்கப்படுவதை எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு, விதிமுறைகளைத் தளா்த்தி வணிகத்தை ஊக்குவிப்பதை காங்கிரஸ் வரவேற்கிறது. ஆனால், அவை விதிகளுக்கு உட்பட்டு மற்றும் நிறுவனங்கள் சுதந்திரமாகச் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

எங்களின் போராட்டம் முதலாளித்துவத்துக்கு எதிரானது. அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என்கிற கோரிக்கையில் எதிா்க்கட்சிகள் அனைவரும் ஒரே அணியில் நிற்கிறோம். நாங்கள் அஞ்சமாட்டோம். தொடா்ந்து குரல் எழுப்புவோம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com