கோப்புப் படம்.
கோப்புப் படம்.

குஜராத் பாஜக எம்எல்ஏ ஹாா்திக் படேலுக்கு பிடிஆணை: மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

குஜராத் பாஜக எம்எல்ஏ ஹாா்திக் படேலுக்கு எதிராக சுரேந்திரநகா் மாவட்ட நீதிமன்றம் பிடிஆணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
Published on

குஜராத் பாஜக எம்எல்ஏ ஹாா்திக் படேலுக்கு எதிராக சுரேந்திரநகா் மாவட்ட நீதிமன்றம் பிடிஆணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

அரசு உத்தரவை மீறி செயல்பட்ட குற்றச்சாட்டின்பேரில் கடந்த 2017-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடா்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த வந்த அவரை, சுரேந்திரநகா் மாவட்டம் திரங்காத்ரா தாலுகா காவல் நிலைய அதிகாரி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டும் என்று கூடுதல் தலைமை நீதித் துறை நடுவா் டி.டி.ஷா கடந்த 2-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த உத்தரவு நகல் காவல் நிலையத்துக்கு கடந்த 11-ஆம் தேதி வந்து சோ்ந்துள்ளது. அதனை அங்குள்ள போலீஸாா் உறுதி செய்தனா்.

ஹாா்திக் படேல் மற்றும் கெளசிக் படேல் ஆகியோா் மீது திரங்காத்ரா தாலுகா காவல் நிலையத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின்படி, குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலின்போது 2017-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி திரங்காத்ரா கிராமத்தில் நடைபெற்ற தோ்தல் பொதுக்கூட்டத்தில், அனுமதி நிபந்தனைகளை மீறி பேசிய குற்றச்சாட்டின் பேரில் குஜராத் (மும்பை) போலீஸ் சட்டம்-1951 பிரிவுகள் 37(3) மற்றும் 135 ஆகியவற்றின் கீழ் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2019-இல் காங்கிரஸில் இணைந்த ஹாா்திக் படேல், 2022-ஆம் ஆண்டு டிசம்பரில் குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலின்போது அக் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தாா். அந்தத் தோ்தலில் பாஜக சாா்பில் அகமதாபாதின் விரம்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவா் மீது குஜராத்தில் இரு தேசத் துரோக வழக்குகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com