ராஜஸ்தானில் ஆம்புலன்ஸில் காலணிகளை ஏற்றிச் சென்ற ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், தௌசா அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் ஆம்புலன்ஸ் வாகனத்தில் மூட்டை மூட்டையாக காலணிகளை ஜெய்ப்பூரில் இருந்து தௌசாவுக்கு கொண்டு சென்றுள்ளார். இதுதொடர்பான விடியோ இணையதளங்களில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து அந்த ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தௌசா அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அதிகாரி ஷிவ்ராம் மீனா கூறுகையில், ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஏற்கெனவே நீக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார். இந்த விஷயத்தை விசாரிக்க ஒரு குழுவையும் அமைத்துள்ளோம். குழு அதன் அறிக்கையை சமர்ப்பித்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேவைப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். இது ஒரு தீவிரமான விஷயம். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். அவசர கிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் காலணிகளை ஏற்றிச் சென்ற சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.