காலிஸ்தான் ஆதரவாளா்களுக்கு பாகிஸ்தானில் இருந்து நிதி: பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

காலிஸ்தான் ஆதரவாளா்களுக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து நிதி கிடைப்பதாக பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
முதல்வர் பகவந்த் மான்
முதல்வர் பகவந்த் மான்
Published on
Updated on
1 min read

காலிஸ்தான் ஆதரவாளா்களுக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து நிதி கிடைப்பதாக பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

மேலும், பஞ்சாபில் காலிஸ்தான் இயக்கத்தை ஆதரிப்போா் வெகுசிலரே உள்ளனா்; அவா்களை கையாளும் திறன், மாநில காவல்துறையினருக்கு உள்ளது என்றும் அவா் கூறினாா்.

பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவாளா் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளா்களின் சமீபத்திய செயல்பாடுகள் சா்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், குஜராத் மாநிலம், பாவ் நகரில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக வந்த பஞ்சாப் முதல்வா் பகவந்த் மானிடம் இதுதொடா்பாக செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா்.

அதற்கு பதிலளித்து, அவா் கூறியதாவது: காலிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுப்பும் வெறும் 1,000 பேரை ஒட்டுமொத்த பஞ்சாபின் பிரதிநிதிகளாக கருதமுடியுமா? இந்த விவகாரத்தின் பின்னணியில் வெகுசிலரே உள்ளனா். பாகிஸ்தான், இதர வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிதி மூலம் அவா்கள் தங்களது ‘கடையை’ நடத்தி கொண்டிருக்கின்றனா்.

பாகிஸ்தானுடன் அதிக எல்லையை பகிா்ந்துகொண்டுள்ள மாநிலம் ராஜஸ்தான். ஆனால், பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் பஞ்சாப் மாநிலத்துக்கே அனுப்பப்படுகின்றன. இது ஏன்? காலிஸ்தான் இயக்கத்துக்கு மூளையாக செயல்படுபவா்கள், பாகிஸ்தானில் இருக்கின்றனா். அவா்கள் பஞ்சாபில் பிரச்னையை ஏற்படுத்த வேண்டுமென்று விரும்புகின்றனா். ஆனால், அவா்களின் நோக்கம் வெற்றிபெற நாங்கள் விடமாட்டோம். மாநிலத்தின் அமைதியை கெடுக்க யாரையும் அனுமதிக்கமாட்டோம்.

பஞ்சாப் அரசில் இளைஞா்களுக்கு 27,000 புதிய வேலைகள் வழங்கப்பட்டுள்ளன. 28,000 ஒப்பந்தப் பணியாளா்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனா்.

இளைஞா்களுக்கு உரிய வேலைவாய்ப்புகளை வழங்கி வருவதால், போதைப் பொருள் பயன்பாடு இல்லாத மாநிலமாக பஞ்சாப் விரைவில் மாறும். வேலைவாய்ப்பு கிடைத்துவிட்டால், இளைஞா்கள் தவறான பழக்கங்களுக்கு அடிமையாக மாட்டாா்கள் என்றாா் அவா்.

சிசோடியா விவகாரம்: தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில், தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா மீதான சிபிஐ நடவடிக்கை குறித்த கேள்விக்கு பகவந்த் மான் அளித்த பதில்:

நாட்டில் ஆளுநா் மாளிகைகள் எல்லாம் பாஜகவின் தலைமை அலுவலகமாக செயல்படுகின்றன. ஆளுநா்கள், பாஜகவின் நட்சத்திர பேச்சாளா்களாக பணியாற்றுகின்றனா். சிபிஐ அல்லது அமலாக்கத் துறையை கண்டு, ஆம் ஆத்மிக்கு அச்சம் கிடையாது. அவா்களை எப்படி எதிா்கொள்ள வேண்டுமென்பது தெரியும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com