
சத்தீஸ்கரின் கோர்பா மாவட்டத்தில் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் காட்டுப்பன்றியை எதிர்த்துப் போராடி மகளைக் காப்பாற்றியுள்ளார் வீரத்தாய் ஒருவர்.
இதுகுறித்து வன அதிகாரிகள் கூறுகையில்,
கோர்பா மாவட்டத்தின் தெலியமர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. துவாஷியா பாய்(45) இவரது மகள் ரிங்கி(11). அருகில் உள்ள பண்ணைக்கு மண் எடுக்க இருவரும் சென்றுள்ளனர்.
அந்த பெண் கோடாரியால் மண்ணைத் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென அந்தவழியாக காட்டுப்பன்றி ஒன்று வந்தது. அது சிறுமியை நோக்கிச் சென்று தாக்க முயன்றது.
துவாஷியா தனது மகளைக் காப்பாற்றும் முயற்சியில் கோடரியைக் கொண்டு காட்டுப்பன்றியிடம் நேருக்குநேர் சண்டையிட்டுள்ளார். ஒருவழியாகப் பன்றியுடன் நிகழ்ந்த போராட்டத்தில் காட்டுப்பன்றியைக் கொன்றார் அந்தப் பெண். ஆனால் காட்டுப்பன்றி கடுமையாகத் தாக்கியதால், துவாஷியா பலத்த காயமடைந்தார்.
உயிருக்குப் போராடிய நிலையில் அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் கொண்டுசெல்லும் வழியிலேயே அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் சிறுமிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த வனத்துறையினர் பெண்ணின் உடலை கைபற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
வன விலங்கு தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.25,000 உடனடி நிவாரணமாக வழங்கப்பட்டது. தேவையான நடைமுறைகள் முடிந்த பிறகு மீதமுள்ள இழப்பீடு ரூ.5.75 லட்சம் வழங்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.