ராகுல்காந்தி நடைப்பயணத்தில் வருண்காந்தி கலந்துகொள்வாரா? ராகுலின் பதில் என்ன தெரியுமா?

இந்திய ஒற்றுமை நடைப்யணத்தில் வருண்காந்தி கலந்துகொள்வாரா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ராகுல்காந்தியின் பதில் உத்தப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
ராகுல்காந்தி நடைப்பயணத்தில் வருண்காந்தி கலந்துகொள்வாரா? ராகுலின் பதில் என்ன தெரியுமா?


புதுதில்லி: இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் வருண்காந்தி கலந்து கொள்வாரா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ராகுல்காந்தி அளித்த பதில் உத்தப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளம் மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் ராகுல்காந்தி,  கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை தொடங்கினார். இந்த நடைப்பயணம் தமிழகம், கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களைக் கடந்து அதன் 108 ஆவது நாளில் தில்லிக்குள் நுழைந்துள்ளது. கடந்த 24 ஆம் தேதி தில்லிக்குள் நுழைந்த நடைப்பயணம் அன்று மாலை செங்கோட்டையில் நிறைவடைந்து. 9 நாள்கள் ஓய்வுக்கு பிறகு ஜனவரி 3-ஆம் தேதி மீண்டும் தில்லியில் இருந்து நடைப்பயணம் தொடங்குகிறது. 

நடைப்பயணத்தின் போது சோனியா, மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா மற்றும் அவரது கணவர் ராபர்ட் வதேரா, தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே, திமுக எம்.பி. கனிமொழி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நடிகர்கள், நடிகைகள் என பலரும் பங்கேற்று ஆதரவு அளித்தனர்.  

ராகுல்காந்தியின் நடைப்பயணத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகின்றது. 

இந்த நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி திங்கள்கிழமை (ஜனவரி 2) வரை நடைப்பயணத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 3) மீண்டும் நடைபயணம் தொடங்குகிறது.

இந்நிலையில், நாளை மறுநாள்  மீண்டும் தொடங்கும் நடைப்பயணத்தில் வருண்காந்தி பங்கேற்பாரா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நடைப்பயணத்தில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி என யார் வந்தாலும் வரவேற்போம். 

வருண்காந்தி வந்தாலும் வரவேற்போம். ஆனால், பாஜகவில் இருப்பதால் அதற்கான சாத்தியமில்லை என்று ராகுல்காந்தி பதிலளித்தார். 

காஷ்மீரில் நடைப்பயணம் நடைபெறும் போது ராகுல்காந்தியுடன் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள். 

ஜனவரி 26 ஆம் தேதி நகரில் தேசியக்கொடியை ராகுல்காந்தி ஏற்றி வைக்கிறார். அன்றுடன் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com