ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் அம்மாநிலத்தில் 5ஜி இணைய சேவையை இன்று (ஜனவரி 7) தொடங்கி வைத்தார்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்புத் துறையில் இது புரட்சிகரமான முன்னேற்றம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் ஜெய்பூர், ஜோத்பூர் மற்றும் உதய்பூர் நகரங்களுக்கு 5ஜி சேவையை தொடங்கி வைத்துப் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: 'இருள் ஆளப்போகிறது': டிமாண்டி காலனி 2 படத்தின் அறிமுக விடியோ!
5ஜி சேவை தொடங்கி வைத்து அசோக் கெலாட் பேசியதாவது: நல்ல நிர்வாகம், வேகமான தகவல் தொடர்பு, அதிவேக இணைய சேவை மற்றும் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை ஆகியவற்றை இந்த 5ஜி சேவை மேலும் வலிமையானதாக மாற்றும். அதே வேளையில் பெருகிவரும் இணையவழி மோசடி இன்றையக் காலக் கட்டத்தில் ஆபத்தானதாக இருக்கிறது. அதனால், அதிவேக இணைய சேவை வசதிகளைப் பெறும் வேளையில் இணையவழி மோசடி குறித்தும் கவனமாக இருக்க வேண்டும்.
நாட்டில் ராஜஸ்தான் அதிக அளவிலான டேட்டாவைப் பயன்படுத்துகிறது. கல்வி, மருத்துவம், தொழில்துறை, வேலைவாய்ப்பு மற்றும் விவசாயம் ஆகியவற்றில் இணைய சேவை முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கண்ட தொழில்நுட்ப வளர்ச்சி நினைவாகியுள்ளது. இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த அப்துல் கலாம் அவர்களும் புதிய தலைமுறைக்கு கனவு இருக்க வேண்டும் என கூறியிருக்கிறார். இன்று, இந்த இணைய சேவை அவர்களின் கனவுகளை நனவாக்கியிருக்கிறது என்றார்.