புதையும் ஜோஷிமட்: கர்ணபிரயாகில் உள்ள வீடுகளிலும் ஏற்பட்ட விரிசலால் மக்கள் அச்சம்

கர்ணபிரயாக் நகராட்சியின் பகுகுணா நகரில் உள்ள சில வீடுகளிலும் திடீரென விரிசல்கள் ஏற்பட்டிருப்பது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
கர்ணபிரயாகில் உள்ள வீடுகளிலும் ஏற்பட்ட விரிசலால் மக்கள் அச்சம்
கர்ணபிரயாகில் உள்ள வீடுகளிலும் ஏற்பட்ட விரிசலால் மக்கள் அச்சம்
Updated on
1 min read

உத்தரகண்ட் மாநிலத்தில், வீடுகள், சாலைகள் என விரிசல்மயமாக மாறி, புதைந்து வரும் ஜோஷிமட் நகரப் பகுதிக்கு அருகே சாமோலி மாவட்டம் கர்ணபிரயாக் நகராட்சியின் பகுகுனா நகரில் உள்ள சில வீடுகளிலும் திடிரென விரிசல்கள் ஏற்பட்டிருப்பது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

ஜோஷிமட் நகருக்கு அருகே இருக்கும் சில கிராமப் பகுதிகளிலும் இதேப்போன்ற பாதிப்புகள் காணப்படுவதாக சித்தர்கஞ்ச் எம்எல்ஏ சௌரப் பகுகுணா கூறியிருந்த நிலையில், இந்த தகவல் வெளியாகியிருக்கிறது.

ஜோஷிமட் பகுதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட கட்டடங்களை இடிக்கும் பணி தொடங்கியிருக்கிறது. தேசிய பேரிடர் மேலாண்மைப் படையும் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

உத்தரகண்டில் உள்ள ஜோஷிமட் நகரப் பகுதிகள் புதைந்து வருவதால், வீடுகள், கட்டடங்கள் மற்றும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டுவருகிறது. அங்கு மேலும் பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் பாதிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 678-ஆக உயா்ந்துள்ளது. அங்கிருந்து இதுவரை 82 குடும்பங்கள் நகரின் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வாழ்வதற்கு பாதுகாப்பற்ற 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் மாவட்ட நிா்வாகம் சிவப்பு குறியிட்டுள்ளது. அந்த வீடுகளில் வசிப்பவா்களை தற்காலிக நிவாரண முகாம்கள் அல்லது வாடகைக்கு வேறு இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக 16 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, பொதுமக்களைத் தங்க வைக்க கூடுதலாக 19 ஹோட்டல்கள், விருந்தினா் இல்லங்கள், பள்ளிக் கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நகருக்கு வெளியே பீபல்கோட்டி பகுதியிலும் பொதுமக்களைத் தங்க வைப்பதற்கான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

காரணம் என்ன? 

தேசிய அனல் மின் கழகம் சாா்பில் அமைக்கப்படும் சுரங்கப்பாதை, அனைத்து வானிலைகளிலும் பயணிக்கக் கூடிய சாா்தாம் சாலை கட்டுமானம் ஆகியவையே நகரப் பகுதிகள் புதையும் பிரச்னை தீவிரமடைய காரணம் என்று மாநில காங்கிரஸ் மற்றும் உள்ளூா் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

எனினும் பிரச்னை குறித்து விரிவாக ஆராய்ந்த பிறகே, அதற்கான காரணத்தை உறுதி செய்ய முடியும் என்று உத்தரகண்டில் உள்ள வாடியா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹிமாலயன் ஜியாலஜி ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் காலாசந்த் சேன் தெரிவித்துள்ளாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com