மக்களை பிளக்கும் அரசியல் தொடர்ந்தால் நாடு நரகமாகிவிடும் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பரபரப்பு கருத்து வெளியிட்டுள்ளார்.
தெலங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்தின் புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டட திறப்பு விழாவில் அம்மாநில முதல்வரும், பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவ் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், “நமது நாடு அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் மக்கள் நலவளர்ச்சியில் முன்னேறி செல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க | சேலத்தில் அம்மா உணவகங்கள் மூடல்? - ஓபிஎஸ் கடும் கண்டனம்!
தொடர்ந்து பேசிய அவர், “மதமோதல்கள் மற்றும் மக்களைப் பிளவுபடுத்துவதை தொடர்ந்து மேற்கொண்டு வந்தால் நாடு நரகமாக மாறிவிடும். தலிபான் அரசைப் போல, ஆப்கானிஸ்தான் அரசைப் போல நாடு சென்றுவிடும்” எனக் குறிப்பிட்டார்.
“நாட்டின் வளர்ச்சிக்கும், மாநிலங்களின் முன்னேற்றத்திற்கும் மத்தியில் முற்போக்கான ஒருபக்க சார்பற்ற அரசு இருக்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் அமைதி, மரியாதையை உறுதி செய்ய வேண்டும். தெலங்கானா அந்த வழியில் சென்று கொண்டுள்ளது. அதற்கு தொடர்ந்து உங்களின் ஆதரவு வேண்டும்” என சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்.