சென்னை: நடப்பு நிதியாண்டின் பிடித்தம் செய்த நேரடி வரியான (டிடிஎஸ்) ரூ.4,000 கோடி இன்னும் வருமான வரித் துறைக்கு மாற்றப்படவில்லை என தமிழக வருமான வரித் துறை முதன்மை தலைமை ஆணையர் ஆர்.ரவிச்சந்திரன் இன்று (ஜன. 12) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் (TDS) அடுத்த மாதம் ஏழாம் தேதிக்குள் மத்திய அரசுக்கு மாற்றப்பட வேண்டும் என்பது விதி. வசூலிக்கப்படும் வரியானது அரசின் சொத்து, பணத்தை டெபாசிட் செய்வதில் தாமதம் ஏற்பட்டால், அதற்கு அபராதம், நிலுவைத் தொகைக்கு அதிக வட்டி மற்றும் வழக்கைக் கூட எதிர்கொள்ள நேரிடும்.
டிடிஎஸ்(TDS) மற்றும் டிசிஎஸ்(TCS) ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து கழிப்பவர்களுக்கு (ஊழியர்) பல முறை அவுட்ரீச் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். இது குறித்து ஒரு கையேடும் தயாரிக்கப்பட்டு இணையதளத்தில் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளது. விரைவில் தமிழில் ஆடியோ மற்றும் விஷுவல் பதிப்பை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நடப்பு நிதியாண்டில் வருமான வரித்துறை, தமிழ்நாடு மற்றும் தமிழ்நாடு மண்டலம், நேரடி வரியாக 82,000 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் இருந்து 70 சதவிகிதம் ஆகும். 2021-22ஆம் ஆண்டில் இலக்கானது ரூ.91,000 கோடியாக இருந்த நிலையில் ரூ.1 லட்சம் கோடியை வருவாய் எட்டியுள்ளது.
அதிக வரி வசூலிப்பதில் மும்பை, தில்லி, பெங்களூருக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலம் நான்காவது இடத்தில் உள்ளது. இங்கு மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ஏற்றவாறு வருமான வரி வசூலிக்கப்படுகிறது. அதே வேளையில் அதிக தொழில்கள் வந்தால் வரி வசூல் மேம்படும். இருப்பினும் தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 30 சதவிகிதம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.