புது தில்லி: புது தில்லியில் கொலை செய்யப்பட்டு, பல துண்டுகளாக உடல் வெட்டப்பட்டு பல்வேறு பகுதிகளில் வீசப்பட்ட சம்பவத்தில், ஷ்ரத்தா வாக்கரின் எலும்புகள் ரம்பத்தால் வெட்டப்பட்டதை கூறாய்வு சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஷ்ரத்தா வாக்கரின் உடல் பாகங்களைத் தேடிய காவல்துறையினர், பல்வேறு பகுதிகளில் கண்டுபிடித்த 23 மனித எலும்புத் துண்டுகளை கூறாய்வு சோதனைக்கு அனுப்பியதில், ஷ்ரத்தாவின் எலும்புகள் ரம்பத்தைக் கொண்டு வெட்டப்பட்டதை உறுதி செய்துள்ளன.
முன்னதாக, ஷ்ரத்தா வாக்கரின் உடல்களை ரம்பத்தைக் கொண்டு வெட்டி பல்வேறு பகுதிகளில் வீசியதாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்தாப் வாக்குமூலம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த எலும்புத் துண்டுகளின் கூறாய்வுகள் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செவ்வாயன்று நடத்தப்பட்டுள்ளது. கூறாய்வில் கிடைத்த முடிவுகள் காவல்துறையினருக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று நம்புவதால், விரைவில் இந்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது.