
ஜோஷிமட் நகரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தனா்.
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமட் நகரத்தின் நிலப்பகுதி புதைந்து வருவதால், அங்குள்ள வீடுகள், சாலைகள் உள்ளிட்டவற்றில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கான காரணம் குறித்து ஆராய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்குவதற்கும் மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க உத்தரவிடக் கோரி சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி என்பவா் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அவருடைய மனுவில், ‘ஜோஷிமட் நகரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு பெரும் அளவிலான நகரமயமாக்கமே காரணம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிதி உதவிகளும் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும்’ என கோரியிருந்தாா்.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜெ.பி.பாா்திவாலா ஆகியோா் அடங்கிய அமா்வுக்கு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள நீதிபதிகள் மறுத்துவிட்டனா். இது தொடா்பாக உத்தரகண்ட் உயா் நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்களிடம் தெரிவித்த நீதிபதிகள், இந்த மனுவைத் தள்ளுபடி செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.