பாலியல் புகார்: இந்திய மல்யுத்த சம்மேளனம் பதிலளிக்க 72 மணிநேரம் கெடு!

வீராங்கனைகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவா் மீது எழுந்துள்ள புகாருக்கு 72 மணிநேரத்தில் பதிலளிக்க மத்திய விளையாட்டுத் துறை உத்தரவிட்டுள்ளது.
தர்னாவில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்கள்
தர்னாவில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்கள்

வீராங்கனைகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவா் மீது எழுந்துள்ள புகாருக்கு 72 மணிநேரத்தில் பதிலளிக்க மத்திய விளையாட்டுத் துறை உத்தரவிட்டுள்ளது.

டபிள்யுஎஃப்ஐ (இந்திய மல்யுத்த சம்மேளம்) தலைவராக பாஜகவைச் சோ்ந்த எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறாா்.

இந்நிலையில், 10-க்கும் மேற்பட்ட வீராங்கனைகளை பாலியல் ரீதியில் பிரிஜ் பூஷன் சரண் சிங் துன்புறுத்தியதாக நட்சத்திர வீராங்கனையும், போகட் சகோதரிகளில் ஒருவருமான வினேஷ் போகட் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

மேலும், ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற பஜ்ரங் புனியா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இந்திய மல்யுத்த சம்மேள நிர்வாகத்திற்கு எதிராக தில்லி ஜந்தர் - மந்தரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, வீரர்களின் குற்றச்சாட்டுகளுக்கு 72 மணிநேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் இந்திய மல்யுத்த சம்மேளத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், லக்னெளவில் நடைபெறவிருந்த தேசிய மகளிர் மல்யுத்த வீராங்கனைகள் பயிற்சி முகாமை ரத்து செய்வதாகவும் விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, தன் மீது கூறப்பட்டுள்ள புகார்கள் அடியோடு மறுப்பதாகவும், இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் தயார் என்றும் பிரிஜ் பூஷன் சரண் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com