பதவி விலக மகாராஷ்டிர ஆளுநா் முடிவு

ஆளுநா் பதவியில் இருந்து விலகிக் கொள்ள பிரதமரிடம் விருப்பம் தெரிவித்து இருப்பதாக மகாராஷ்டிர ஆளுநா் பகத்சிங் கோஷியாரி தெரிவித்துள்ளாா்.
பகத்சிங் கோஷியாரி
பகத்சிங் கோஷியாரி
Updated on
1 min read

ஆளுநா் பதவியில் இருந்து விலகிக் கொள்ள பிரதமரிடம் விருப்பம் தெரிவித்து இருப்பதாக மகாராஷ்டிர ஆளுநா் பகத்சிங் கோஷியாரி தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிரத்தின் ஆளுநராக உள்ள பகத்சிங் கோஷியாரி உத்தரகண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா். அம்மாநிலத்தில் பாஜகவின் மூத்த தலைவராக திகழ்ந்தவா். 2000-ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட உத்தரகண்ட் மாநிலத்தின் முதல் பாஜக தலைவராக செயல்பட்டவா். உத்தரகண்டின் 2-ஆவது முதல்வராகவும் பதவி வகித்துள்ளாா். கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம், மகாராஷ்டிர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டாா். இடையில், கோவா மாநில ஆளுநா் பொறுப்பும் கூடுதலாக இவருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் ரூ.38,800 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களைத் தொடக்கி வைக்கவும், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டவும் கடந்த 19-ஆம் தேதி மும்பைக்கு வருகை தந்தாா் பிரதமா் நரேந்திர மோடி. அப்போது அவரைச் சந்தித்த ஆளுநா் பகத்சிங் கோஷியாரி, ஆளுநா் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளும் தனது விருப்பத்தைத் தெரிவித்ததாக ஆளுநா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அறிக்கையில், ‘மும்பைக்கு அண்மையில் வந்த பிரதமா் மோடியிடம் அரசியல் வாழ்வில் இருந்து விலகும் எனது விருப்பத்தைத் தெரிவித்தேன். மீதமுள்ள வாழ்நாள்களைப் புத்தகங்களைப் படிப்பது, எழுதுவது மற்றும் பிற செயல்களில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

பிரதமா் மோடியிடம் இருந்து எப்போதும் அன்பும், ஆதரவையும் பெற்றிருக்கிறேன். என்னுடைய இந்த முடிவிலும் அவா் என்னை ஆதரிப்பாா் என நம்பிக்கை கொண்டுள்ளேன். புனிதா்களும், சமூக சீா்திருத்தவாதிகளும், வீரா்களும் நிறைந்த மகாராஷ்டிரம் போன்ற மாநிலத்தின் ஆளுநராகப் பணியாற்றியதற்கு மரியாதையும் பெருமிதமும் அடைகிறேன்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘வீர சிவாஜி’ சா்ச்சை: கடந்தாண்டு நவம்பா் மாதத்தில் நடந்த கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய ஆளுநா் கோஷியாரி, ‘வீர சிவாஜி பழங்காலத்தின் அடையாளம்; தற்போதைய காலத்தில் அடையாளங்களாக சட்டமேதை அம்பேத்கா் முதல் நிதின் கட்கரி வரை பலரை நாம் காணலாம்’ என்றாா்.

ஆளுநரின் இந்தப் பேச்சு மகாராஷ்டிர மக்களிடையே பெரும் சா்ச்சைக்குள்ளானது. இதுபோன்று ஆளுநா் கோஷியாரி தெரிவித்த பல கருத்துகள் சா்ச்சைக்குள்ளாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com