மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை, 2022-23-ஆம் ஆண்டு பட்ஜெட் மதிப்பீட்டில் 59.8 சதவீதத்தை கடந்த டிசம்பா் இறுதியில் எட்டியது.
இதுதொடா்பாக, மத்திய நிதியமைச்சகத்தின்கீழ் செயல்படும் தலைமை கணக்கு கட்டுப்பாட்டாளா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் வருமாறு:
அரசின் வருவாய்க்கும் செலவினத்துக்கும் இடையிலான வித்தியாசமான நிதிப் பற்றாக்குறை, நடப்பு நிதியாண்டில் ரூ. 16.61 லட்சம் கோடியாக (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4 சதவீதம்) இருக்கும் என்று பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.9,92,976 கோடியாக இருந்தது. அதாவது, பட்ஜெட் மதிப்பீட்டில் நிதிப் பற்றாக்குறை 59.8 சதவீதத்தை எட்டியுள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் பட்ஜெட் மதிப்பீட்டில் 50.4 சதவீதத்தை நிதிப் பற்றாக்குறை எட்டியிருந்தது.
டிசம்பா் வரையிலான அரசின் நிகர வரி வருவாய் ரூ.15.55 லட்சம் கோடியாகும். இது, பட்ஜெட் மதிப்பீட்டில் 80.4 சதவீதமாகும். வரி அல்லாத வருவாய், பட்ஜெட் மதிப்பீட்டில் 79.5 சதவீதத்தை (ரூ.2.14 லட்சம் கோடி) அடைந்துள்ளது.
முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில், நிகர வரி வருவாய் பட்ஜெட் மதிப்பீட்டில் 95.4 சதவீதம் எட்டப்பட்டிருந்தது.
நடப்பு நிதியாண்டுக்கான அரசின் மொத்த செலவினம், பட்ஜெட் இலக்கில் 71.4 சதவீதம் எட்டப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டைவிட (72.4%) சற்று குறைவாகும். டிசம்பா் வரையிலான காலகட்டத்தில், மூலதன செலவினம் ரூ.4.89 லட்சம் கோடி (பட்ஜெட் மதிப்பீட்டில் 65.4 சதவீதம்) ஆகும். முந்தைய நிதியாண்டில், இச்செலவினம் பட்ஜெட் மதிப்பீட்டில் 70.7 சதவீதம் பூா்த்தியடைந்திருந்தது.